சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்
சிறுபாணாற்றுப்படை - பொருட்சுருக்கம்
நிலமகளின்
தோற்றம்
பெரிய
நிலமாகிய பெண், மணிகளையுடைய மலைகளாகிய அழகிய முலைகளும், மூங்கிலாகிய தோள்களுமுடையவள்.
அவளுடைய அழகிய முலைகளில் கிடந்து அசைகின்ற மாலையைப் போல், ஓடிவருகின்ற நீரானது, தொலைவிலிருந்து
வருகின்ற காட்டாற்றோடு கலக்கும். அந்தக் காட்டாற்றின் கரையில் நறுமணமுள்ள சோலைகள் உள்ளன. அந்தச் சோலைகளில்
உள்ள குயில்கள் (தம் அலகுகளால்) குடைந்து உதிர்த்த புதிய சாதிப்பூக்களைச் சூடிய, பக்கங்கள்
சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்து கிடப்பதைப்போல் ஆற்றின் கரையில் உள்ள நுண்ணிய கருமணல்
இருக்கும்.
இளைப்பாறும்
பாணன்
அந்தக்
கருமணலில் உள்ள சூடான பரற்கற்கள் தங்கள் கால்களைக் கிழித்து வருத்துவதால், பரிசளிக்கும்
வள்லல்களைத் தேடிவந்த ஒரு பாணனும் அவன் சுற்றத்தாரும் மெல்ல நடந்து செல்கின்றார்கள்.
இளவேனிற்காலத்திற்கு அடுத்துவரும் முதுவேனிற்காலத்தில், காலைக் கதிரவனின் கதிர்கள்
வெப்பத்தை மிகுதியாகச் செலுத்துவதால் பாலை நிலத்தில் நீண்ட வழியையுடைய காட்டுப் பாதையில்
உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி அவர்கள் இளைப்பாறுகிறார்கள்.
விறலியின்
அழகு
மெதுவாகத் துளித்துளியாக மழை பெய்யும் கரிய மேகத்தைப்போல்
கரிய நிறத்தையும் அழகையும் கொண்டது எண்ணெய் தடவிய விறலியரின் கூந்தல். அந்த விறலியரின்
கூந்தலைப்போன்ற, நீலமணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, ஒன்றுசேர்ந்து ஆடும் ஆண்மயில்கள்
தம் தோகைகள் விறலியரின் கூந்தல் அழகுக்கு ஒப்பாகாமையால் நாணிப், பெண்மயில்களின் கூட்டத்துக்குள்
மறைந்துகொள்வதற்குக் காரணமான அழகுடையவர்கள் விறலியர். இத்தகைய அழகிய விறலியரின் பாதங்கள், ஓடித் தளர்ந்து
வருந்துகின்ற நாயின் நாக்கைப்போல் நல்ல அழகினைப் பெற்று, ஒளிரும் அணிகலன்கள் இல்லாமல்,
பொலிவிழந்து காணப்படும். அந்தப் பாதங்களைத் தொடர்ந்து, விறலியரின் தொடைகள் கரிய பெண்யானையின்
தரையில் படுகின்ற பெரிய துதிக்கையைப்போலத் திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்திருக்கும்.
அந்தத் தொடைகளைப் போலத் திரண்டு, மேகங்கள் தவழும் மலையில் வளரும் வாழையின் பூவைப்போல்
விறலியரின் பொலிவு பெற்ற கூந்தல் முடிப்புகள் இருக்கும். அக் கூந்தல் முடிப்பில், செறிந்த
கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்று அலர்ந்த மலர்களை விறலியர் சூடியிருப்பர். அந்த
மலர்களை விரும்பி, அவற்றின் தேனை உண்டு களித்த வண்டுகள், விறலியரின் உடலில் உள்ள மஞ்சள்
நிறமான தேமலை மலர் என்று நினைத்து ஆரவாரிக்கும். அவ் விறலியரின் அணிகலன்களின் அகத்தே
ஒடுங்கிக் கிடக்கும், விருப்பம் தருகின்ற முலைகள், கோங்க மரத்தின் ஒளிரும் மொட்டுகளை
எள்ளி நகையாடும். அம் முலைகளைப் போன்ற பெரிய குலையினையுடைய பனையின் நுங்கில் உள்ள இனிய
நீரைவிட அவ் விறலியரின் பற்களிலிருந்து வடிகின்ற ஊறல் இனிமையானதாக இருக்கும். அப் பற்களைப் போன்ற கஞ்சங்குல்லை மலர்கள் நிறைந்த
அழகிய முல்லை நிலத்தில் உள்ள முல்லை மலர்களைச் சூடுதற்கமைந்த கற்பும், மெல்லிய இயல்பும்,
மடப்பமும், மான் போன்ற பார்வையும், ஒளியுள்ள நெற்றியுமுடைய, விறலியரின் நடையால் இளைத்து
ஓய்ந்த நல்ல மெல்லிய சிறிய அடிகளைப் பாடுவதைத் தவிர வேறு எதுவும் கற்காத இளைஞர் மெதுவாகத்
தடவிவிடுகின்றனர்.
பரிசில் பெற்ற பாணன் பரிசில் தருவோரைத்
தேடிச் செல்லும் பாணனைச் சந்திக்கிறான்
பொன்னை
உருக்கிச் செய்த கம்பியைப் போன்ற முறுக்கிய நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தில்
தழுவிப் பாலை என்னும் பண்ணை இயக்குவதில் வல்ல பாணன் முறைமையை அறிந்து அதை இயக்கிக்கொண்டிருக்கிறான்.
அவனை நோக்கி, பரிசில் பெற்ற பாணன், “புரவலரை விரும்பி, வருத்தத்தோடு கூடிய வறுமை உன்னை
வழிப்படுத்துவதால் வந்த வருத்தம் தீர்ந்து இளைப்பாறும் பேரறிவுடைய இரவலனே! நானும் என்
சுற்றத்தாரும் உங்களைப்போல் மிகுந்த வறுமையில் இருந்தோம். நல்லியக்கோடன் என்ற மன்னனிடம் சென்று அவனைப் புகழ்ந்து
பாடி, யானைகளையும் தேர்களையும் பரிசுகளாகப் பெற்றோம். நீங்களும் நல்லியக்கோடனிடம் செல்லுங்கள்.”
என்று கூறி அவனை ஆற்றுப்படுத்துகிறான்.
சேர
நாட்டின் வளம்
கொழுத்த
மீன்கள் வெட்டுப்படும்படி நடந்து, வளமான இதழையுடைய செங்கழுநீர்ப்பூவை மென்று தின்ற,
பெரிய வாயையுடைய எருமை, பசுமையான மிளகுக்கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில், மஞ்சளின்
மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகைத் தடவ, முற்றாத இளைய தேன் மணக்கும்படி, அசைபோட்டு
நடந்து, காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும். அத்தகைய வளமான மேற்றிசையில் உள்ள
நிலத்தைக் காக்கும் குடியில் பிறந்தவன் சேர மன்னன். அவன் பகைவருடைய வடதிசையில் உள்ள
இமயத்தில் வளைந்த வில்லைப் பொறித்தவன்; கணைய மரத்தைப் போன்ற தோளையும், விரைந்து செல்லும்
தேர்ப்படையையும் உடையவன். பெருகிவரும் ஆற்று நீரும் கோட்டைவாயிலுமுடைய அந்தச் சேரனுடைய
வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் சிறிதளவானதாகவே இருக்கும்.
பாண்டிய
நாட்டின் சிறப்பு
உப்பு
வாணிகரின் வண்டியை வலிமையான எருதுகள் இழுத்து செல்லும். அந்த வண்டியோடு உப்பு வாணிகரும்,
உமணத்தியரும் வருவர். தங்களின் பிள்ளைபோல் உமணனாலும் உமணத்தியாலும் வளர்க்கப்பட்ட குரங்கும்
உப்பு வண்டியில் வரும். நுணா மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட சிறிய மரத்துண்டுகளைக்
கூர்மையான உளியால் குடைந்து கைத்தொழில் வல்லுநர் செம்மையாச் செய்த மாலையை மார்பில்
அணிந்து, நெட்டியால் செய்த பூ மாலையைச் செவியடியில் அந்தக் குரங்கு சூடியிருக்கும்.
மடப்பத்தையுடைய மகளிரின் பற்களைப் போன்ற முத்துகளைக் கிளிஞ்சிலின் உள்ளே அடக்கி, அதைக்
கிலுகிலுப்பையாகக்கொண்டு உமணத்தி பெற்ற, பிள்ளைகளுடன் அந்தக் குரங்கு விளையாடும்.
இத்தகைய
நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற, அலைபாயும் கடலை எல்லையாகக்கொண்ட கொற்கையின் மன்னன் தெற்கிலுள்ள
நாட்டைக் காவல் புரியும் பாண்டியர் மரபில் தோன்றியவன்; பகைவருடைய நிலத்தை மாறுபாட்டால்
கைக்கொண்டவன்; முத்துமாலை அணிந்த வெண்கொற்றக்குடையை உடையவன்; கண்ணுக்கு அழகான மாலைகளை
அணிந்தவன்; விரைந்தோடும் தேர்களையுடையவன். தமிழ் வீற்றிருக்கும், பெருமைக்குரிய மரபையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் தெருவினையுடைய பாண்டியனின் மதுரையில் பெறும் பரிசிலும்
சிறிதளவானதாகவே இருக்கும்.
சோழநாட்டின்
பெருமை
சோழநாட்டில்
உள்ள நறுமணம் மிக்க பொய்கையின் கரையில் நின்று வளர்ந்த கடம்ப மரங்களில் கொத்துக்கொத்தாக
மாலைபோலப் பூக்கள் பூத்திருக்கும். அந்தப் பூக்களிலிருந்து தம்பலப் பூச்சிகளைப் போன்ற
தாதுக்கள் நீர் உண்ணும் துறையின் பக்கத்தில் உதிர்ந்து பரந்திருத்தலால், அந்தத் துறையின்
கரை ஓவியம்போல் அழகுபெற்று விளங்கும். அந்தத் துறையில், வளர்கின்ற முலையை ஒத்த வளமான
மொட்டுகள் நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்து தெய்வத் தன்மையுடைய தாமரையாகக் காட்சி
அளிக்கும். பெண்களின் மாசற்ற உள்ளங்கையில் சிவந்த நிறம் பொருந்தி இருப்பது போன்று,
சிவந்த இதழ்கள் நிறைந்த அந்தத் தாமரை மலர்களின் நடுவில், தம்முடைய இனிய துணைகளைத் தழுவி,
சிறகுகளை அசைத்து வண்டுகள் சீகாமரம் என்ற பண்ணை இசைக்கும். சோழ மன்னன் அத்தகைய மருத நிலம் சூழ்ந்த, சோர்வில்லாத
குடியிருப்பினையுடைய கிழக்குத் திசையில் உள்ள நாட்டைக் காக்கும் குடியில் தோன்றியவன்;
வானத்தே தொங்கும் கோட்டை மதிற்கதவை இடியுடன் கூடிய மேகம் தினவால் தன் கழுத்தைத் தேய்க்கும்
கோட்டையை அழித்தவனின் வழித்தோன்றல்; ஓளிபொருந்திய வீரவளை விளங்கும் பெருமையுடைய கையினையும்
தான் விரும்பித் தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடையவன். குடிமக்கள் தம்
நாட்டைவிட்டு விலகாத சோழ நாட்டின் உறந்தையில் கிடைக்கும் பரிசும் சிறிதளவானதாகவே இருக்கும்.
கடையெழு வள்ளல்களின்
சிறப்பு
காட்டில்
வாழும் மயிலுக்கு ஆடை அளித்த மன்னன் பேகன். முல்லைக் கொடிக்குத் தன்னுடைய பெரிய தேரை
கொழுகொம்பாகக் கொடுத்தவன் பாரி. ஒலிக்கும் மணியும், வெண்மையான தலையாட்டத்தை உடைய குதிரையும்,
பலரும் வியக்குமாறு அன்போடு கூடிய நல்ல மொழியும் இரவலர்க்குக் கொடுத்தருளியவன் காரி.
பாம்பு தனக்குக் கொடுத்த ஆடையை சிவபெருமானுக்குக் கொடுத்தவன் ஆய். நெல்லி மரத்தில்
அமிழ்தின் தன்மைகொண்டு விளைந்த இனிய பழத்தை ஔவைக்குக் கொடுத்தவன் அதிகன். நட்புச் செய்தோர்
மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பொருளைக் குறையாமல் கொடுத்தவன் நள்ளி.
புன்னை மரங்களையும் சிறு குன்றுகளையுமுடைய நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்குக் கொடுத்தவன்
ஓரி.
நல்லியக்கோடனின்
ஈகைச் சிறப்பு
நல்லியக்கோடன்
அந்தக் கடையெழு வள்ளல்கள் எழுவரும் மேற்கொண்ட ஈகையாகிய செவ்விய பாரத்தை, ஒருவனாகத்
தானே பொறுத்த வலிமையான முயற்சியுடையவன். நறுமணமுள்ள மலர்களையுடைய சுரபுன்னையும் அகிலும்
சந்தனமும், நீராடும் துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி கரையை
மோதுகின்ற நீர் கொண்டுவந்து தருகின்ற, அழித்தற்கு அரிய மரபையுடைய பழைய பெருமை மிக்க
இலங்கையின் பெயரைத் தான் தோன்றிய காலத்திலேயே தனக்குப் பெயராகவுடைய நல்ல பெருமையையுடைய
மாவிங்கையை ஆண்ட மன்னர்கள் பலருள்ளும், குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, குறி தப்பாத
வாளினையுடையவன் நல்லியக்கோடன். அவன் வலிமையில்
புலியைப் போன்றவன்; ஓவியர் குடியில் தோன்றிய பெருமகன்; யானையைச் செலுத்துவதால் உண்டான
தழும்பு இருந்த, வீரக்கழல் அசையும், திருத்தமான அடிகளையுடையவன்; பெண்யானைகளை மழை போல
வாரி வழங்கும் வள்ளன்மை பொருந்திய பெருமைக்குரிய கைகளையுடையவன். பல்வேறு இசைக்கருவிகளையுடைய
கூத்தர்களின் புரவலன்; அத்தகைய பெரிய புகழையுடைய நல்லியக்கோடனைக் கண்டு அவனிடமிருந்து
பரிசு பெற விரும்பி, பிறரால் பொறுத்தற்கரிய மரபையுடைய அவனைப் பற்றியும், அவன் தந்தையைப்
பற்றியும் அவனுடைய வானத்தைத் தொடும் நெடிய மலையின் வளத்தைப் பற்றியும் பாடிச் சில நாட்களுக்கு
முன்னர் நாங்கள் அங்குச் சென்றோம்.
நல்லியக்கோடனைக்
காணுமுன் இருந்த வறுமையும் அவன் வள்ளன்மையும்
நல்லியக்கோடனைக்
காணுமுன், எங்கள் வீட்டில், கூரையைத் தாங்கி நிற்கும் கழிகள் இற்றுப் போயின. அங்குள்ள
சுவர்களைக் கறையான்களின் கூட்டம் அரித்ததால் தோன்றிய புழுதியில் காளான்கள் பூத்தன.
பசியால் வருந்திய என் மனைவி தன் கூர்மையான நகத்தால் குப்பையில் விளைந்த கீரையைக் கிள்ளி,
உப்பில்லாமல் வேகவைத்துச் சமைத்தாள். அதை எங்கள் குடும்பத்தினர் உண்ணுவதைப் பிறர் பார்த்தால்
பழித்துப் பேசுவார்கள் என்பதற்காக வெட்கப்பட்டு, வாயிலை அடைத்து, மிகப்பெரிய சுற்றத்துடன்
ஒன்றுகூடி உண்டோம். எங்களின் அத்தகைய பசியால் தோன்றிய வருத்தம் நீங்குமாறு, நல்லியக்கோடன்
அளித்த யானையோடு, பெரிய தேரையும் பெற்று நாங்கள் நல்லியக்கோடனிடமிருந்து வருகின்றோம்.
நீயும் உன் சுற்றத்தாரும் நல்லியக்கோடனிடம் செல்லுங்கள். அங்குச் செல்லும் வழியை நான்
உங்களுக்குக் கூறுகிறேன்.
எயிற்பட்டினத்துக்குச்
செல்லும் வழியும் பரதவரின் விருந்தோம்பலும்
அலைகளைக்கொண்ட
கடலின் கரையில் உள்ள தாழை மரம் அன்னப்பறவை போலப் பூத்திருக்கும்.
இளவேனிற்காலத்தின்
முதல் நாளில், செருந்தி மலர்கள் பொன்னைப்போல் பூத்துக் காண்பவர்களை மனத்தடுமாற்றம்
அடையச் செய்யும். முள்ளிச் செடிகள் ஒளியுடைய
நீலமணிபோலப் பூத்திருக்கும். நெடிய தாளையுடைய புன்னை முத்துப்போல் அரும்புகளைப் பெற்றிருக்கும். கடற்கரையின் வெண்மணற் பரப்பில் கடல் பரந்து ஏற, புலவர்கள் பாடுதற்கேற்ப அமைந்த
நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழியில், நீலமணிபோன்ற
கழிநீர் சூழ்ந்த ஊர்களும், மதிலைத் தன் பெயரில் கொண்ட, குளிர்ந்த நீர் மிக்க குளங்களுமுடைய, எயிற்பட்டினத்திற்குச் செல்வீராயின், உயரமான ஒட்டகம் படுத்து உறங்குவதுபோல், மிகுந்த அலைகள் கொண்டுவந்த நறுமணமுள்ள அகில் மரக்கட்டைகளில்
கரிய புகையையுடைய சிவந்த தீயை மூட்டி, பெரிய தோளினையும், வேலைப் போன்ற கண்களையுமுடைய
நெய்தல் நிலப்பெண் காய்ச்சி வடிகட்டிய பழைய கள்ளின் தெளிவை, நெய்தல் நில ஆடவர் நீங்கள் உண்ணுவதற்குக் கொடுப்பர். நல்லியக்கோடன்
பூந்தோட்டங்களையுடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன்; அரும்புகள் மலர்ந்த மாலையை
அணிந்த பெருமைக்குரியவன். நீங்கள் அவனைப் பாடி, குழலோசையின் தாளத்திற்கேற்ப ஆடும் விறலியர்
ஆடினால், சூடான குழல்மீன் கறியை வீடுகள்தோறும் பெறுவீர்கள்.
வேலூரில் விருந்து
பசுமையான
அரும்புகளையுடைய அவரை பவளம் கோர்த்ததுபோல் பூத்திருக்கும். கரிய அரும்புகளையுடைய காயா
மலர்கள் கூட்டமாக இருக்கும் மயில்களின் கழுத்துகளைப் போல மலர்ந்திருக்கும். செழுமையான
முசுண்டைக்கொடியில் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி போலப் பூக்கள் பூத்திருக்கும். செழுமையான காந்தள் மலர்க் குலைகள் கைவிரல்கள் போலப்
பூத்திருக்கும். கொல்லையிலுள்ள நெடிய வழியில் பட்டுப்பூச்சி ஊர்ந்து செல்லும். முல்லைக்கொடிகள்
படர்ந்த காட்டில், மலைப்பிளவுகளில் விழும்
அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கியதால்
ஞாயிற்றின் சுடர்கள் மறைகின்ற மாலைக்காலத்தில் வானத்தைப் பார்த்து, வேலின் நுனிபோல
மலரும் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைய, வலிமை மிக்க வேலால் வெற்றி பெற்ற வேலூரை நீங்கள்
அடைந்தால், மிக்க வெயில் வருத்துவதால், ஒளிரும் வெப்பத்திற்காகக் குடிசையின் உள்ளேயே
இருக்கின்ற எயிற்றியர் குலப்பெண்கள் (பாலைநில மகளிர்) இனிய புளியிட்டுச் சமைத்த சூடான சோற்றை, உங்கள்
மகளிரின் கூட்டமும் நீங்களும் காட்டுப்பசுவின் சூடான இறைச்சியோடு மனநிறைவடையப் பெறுவீர்கள்.
ஆமூர்
வளமும் உழத்தியரின் விருந்தோம்பலும்
அன்றலர்ந்த நறுமணமுள்ள மலர்களை மாலையாகத் தொடுத்ததைப்போல் காட்சி அளிக்கும்
கிளைகளையும், குறுகிய அடிமரத்தையும்கொண்ட காஞ்சி மரத்தின் கிளைகளில் ஏறி,
பொன்னிறமான வாயையுடைய நீலமணி போன்ற மீன்கொத்திப் பறவை, நீண்ட நேரம் காத்திருந்து, வறண்ட காலத்திலும் நீர் வற்றாத
அரிய குளத்தில் மூழ்கி, புலால் நாற்றம்
வீசும் கயல்மீன்களைக் கவ்வி எடுக்கும். அவ்வாறு, மீன்கொத்திப் பறவை மீன்களைக்
கவ்வி எடுக்கும்பொழுது, அதன் நகத்தால் கிழித்த வடு அழுந்திய பசுமையான இலைகளையும்
முள்ளுடன் கூடிய தண்டையும் உடைய தாமரையின் அரும்பு விரிந்த மலர்களில், அதிகாலைப் பொழுதில்,
நீல நிறத்தையும் சிவந்த கண்களையும் உடைய ஆண்வண்டு தேனை நுகரும். அவ்வாறு, வண்டு வந்து
தாமரை மலரில் அமர்வது, பாம்பு திங்களை மறைப்பதுபோல இருக்கும். அத்தகைய காட்சிகள்
நடைபெறும் வளமான மருத நிலத்தில், குளிர்ச்சியான வயல்களும், அழகிய குளிர்ந்த
அகழியும், அந்தணர்கள் நீங்காமல் இருக்கும் அரிய காவலையுமுடைய ஊர் ஆமூர். அந்த
ஊரில் உள்ள உழவர்கள் வெற்றியுண்டாகும்படி நடக்கும், வலிமை பொருந்திய கழுத்தும் மனவுறுதியும்கொண்ட
வலிமையான எருதுகளை உடையவர்கள். அந்த உழவர் குடும்பத்தில் உள்ள பெண்கள்
பெண்யானையின் துதிக்கையைப் போன்ற பின்னல் வீழ்ந்து கிடக்கும் முதுகையும் வளையல்
அணிந்த கைகளையும் உடையவர்கள். அத்தகைய ஆமூருக்கு நீங்கள் சென்றால், அங்குள்ள உழவர்
குடும்பப் பெண்கள் தம் மக்களின் துணையோடு உங்களைப் போகாமல் தடுத்து, கரிய, வைரம்
பாய்ந்த உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாகக்
குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்று உருண்டைகளோடு, பிளவுபட்ட கால்களையுடை
நண்டின் கறியோடு கலந்து கொடுக்கும் உணவை நீங்கள் பெறுவீர்கள்.
நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பு
எரியும்
தீ கீழே சாய்ந்தது போன்ற நாக்கையும், ஒளிரும் பற்களையும், கரிய ஆட்டுக்குட்டிகளை அணிந்த
காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள் இறந்தவர்களின் தசையைத் தின்று சிரிக்கின்ற
தோற்றத்தைப்போல், பிணங்களைக் காலால் உதைத்ததால் சிவந்த பெரிய நகங்களையும் பெரிய கால்களையும்
உடைய தலைமைத் தன்மை பொருந்திய யானைகளின் தோற்றம் இருக்கும். அந்த யானைகளிலிருந்து வடியும் மதநீர், அருவி போலச்
சொரிந்து தெருவில் உள்ள தூசியை அடக்கும். அத்தகைய, புழுதி அடங்கிய தெருவினையுடைய, நல்லியக்கோடனின்
விழா நடக்கின்ற பழைய ஊர் தொலைவில் இல்லை; சிறிது அருகிலேதான் உள்ளது.
நல்லியக்கோடனின்
அரண்மனை வாயில்
நல்லியக்கோடனின்
அரண்மனை வாயில், கடவுள் இருப்பதாகாக் கருதப்படும் பெருமைக்குரிய மலை (இமய மலை) கண்
விழித்துப் பார்ப்பதுபோல இருக்கும். அந்த வாயில் கிணைப்பறையைக் கொட்டி மன்னனைப் புகழ்ந்து
பாடிப் பரிசுபெற வருபவர்களுக்கும், புலவர்களுக்கும், அரிய மறையைக் கற்றுணர்ந்த நாவினை
உடைய அந்தணர்க்கும் அடைக்கப்படாமல் இருக்கும்.
நல்லியக்கோடனை
சான்றோரும், மறவரும், மகளிரும் பரிசிலரும் வாழ்த்தல்
பிறர்
தனக்குச்செய்த நன்மையை மறவாத தன்மையையும், அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களோடு சேராமல்
இருக்கும் இயல்பையும், இனிய முகம் உடையவனாகவும் இனிய சொற்களைப் பேசுகின்றவனாகவும் இருப்பதையும்,
நிறைந்து விளங்குகின்ற சிறப்பையும் சான்றோர் புகழ்வர். தனக்கு அஞ்சியவர்க்கு
அருள்செய்தலையும், கொடிய சினம் இல்லாமையையும், பகை வீரரின் அணியில் புகுதலையும்,
தளர்ச்சியுற்ற தன் படைக்குத் துணையாக இருந்து காத்தலையும், வாளைவிட மேலான
வலிமையுடைய சொற்களால் வீரர்கள் புகழ்வர். தான்
எண்ணியதை முடிக்கும் தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும், தான் அவர்கள் வசமாகாமையும்,
பிறர் மனங்களில் உள்ளவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் மகளிர் புகழவர். தான் கூறுவதை
அறிந்துகொள்ளக்கூடிய அறிவில்லாதர்களிடத்து அறிவு குறைந்தவனாகவும், அறிவுடையோரிடம் தன்
அறிவை மெய்ப்பித்துக் காட்டுதல், பரிசிலரின் தகுதியை அறிந்து அவர்களுக்கு எல்லையில்லாமல்
பரிசுகளை வாரி வழங்குதல் ஆகிய பண்புகளைப் பரிசிலர் புகழ்வர்.
நல்லியக்கோடனை
அணுகுதலும் அவனிடம் யாழ் வாசிப்பதும்
இவ்வாறு
சான்றோர்,
மறவர், மகளிர், பரிசிலர் போன்றவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்தும்பொழுது,
நல்லியக்கோடன் விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால் போன்ற ஒளியை உடைய நிறைமதிபோல், வீற்றிருப்பான்.
அவனை அணுகுங்கள். பசிய கண்களையுடைய
குரங்கு ஒன்று பாம்பின் தலையைப் பிடித்தால், அது எப்படி அப்பிடியிலிருந்து விடுபட,
இறுக்க வேண்டிய இடத்தில் இறுக்கி, நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழுமோ, அதுபோல் குரங்கின்
கையையொத்த யாழின் தண்டில் உள்ள பாம்பின் உடல் போன்ற யாழின் நரம்பை, இறுக்கவும் நெகிழவும்
செய்தற்கமைந்த திவவு எனப்படும் பாம்பின் தலையையொத்த வார்க்கட்டு அமைந்திருக்கும். யாழின் இரு விளிம்புகளையும் இணைக்க வரிசையாக முடுக்கப்பட்ட
ஆணிகள் வரிசையாகக் கோர்க்கப்பட்ட மணிகள்போல் அழகாகாகக் காணப்படும். பத்தர் எனப்படும்
யாழின் அடிப்பக்கத்தில் குடம்போல் இருக்கும் நடுப்பாகம் தண்டினோடு பொருந்துமாறு ஒழுங்கு
செய்யப்பட்டிருக்கும். காட்டில் காணப்படும்
குமிழ மரத்தின் செந்நிறப் பழங்கள்போலச் சிவப்பு நிறம் ஏற்றப்பட்ட, புகழ்தற்குரிய வேலைப்பாடு
அமைந்த அழகான போர்வை யாழின்மேல் போர்த்தப்பட்டிருக்கும். போர்வையை அகற்றி அந்த யாழை
இசைக்க, யாழின் நரம்புகளிலிருந்து தேன்வழிந்து பாய்வது போலவும் அமிழ்தத் துளிகள் பொழிவது
போலவும் இனிய இசை பிறக்கும். பாடுதற்குரிய
அனைத்தையும் நீ முழுமையாகப் பாடுவதற்கு ஏற்ற வகையில், இசைத்தன்மையைத் தன்னிடத்தில்
முற்றும் பெற்ற இனிய யாழை, இசை நூல்கள் கூறும் முறைப்படி, செம்பாலை என்னும் இசையை இயக்கவும்.
அவ்வாறு யாழினை இசைத்தவாறே, நல்லியக்கோடன், ”சான்றோர் பெருமக்கள்முன் குவித்த கையினன்;
இளம் வீரர்களைப் பாராட்டி அணைத்துக்கொள்ளும் மலர்ந்த மார்பினன்; ஏர்த்தொழில் புரியும்
உழவர்களுக்கு ஆதரவாக நிழல்தரவல்ல செங்கோலை ஏந்தியவன்; தேரினையுடைய பகைவர்க்கு வெப்பமான
வேலைக் கையில்கொண்டவன்.” என்று சில புகழ்மொழிகளை நீ கூறுவாயாக.
நல்லியக்கோடன்
பரிசிலரை உபசரிக்கும் முறை
நீ
கூறி முடிப்பதற்கு முன்பே, மாசில்லாத மூங்கிலின் பட்டையை உரித்தது போன்ற மெல்லிய ஆடையை
உடுத்திக்கொள்ளவும், பாம்பு சீறியெழுவதைப் போன்ற எழுச்சியைத் தரும் கள்ளின் தெளிவைக்
குடிப்பதற்கும் நல்லியக்கோடன் உனக்கு அளிப்பான். காண்டவம் என்ற காட்டை எரித்த கணையைக்கொண்ட
அம்பறாத்தூணியையுடைய, பூத்தொழிலோடு கூடிய ஆடையை அணிந்த புகழ்மிக்கவனின் (அருச்சுனனின்)அண்ணனும்,
பனியுடைய இமயம் போன்ற மார்பையுடையவனும் ஆகிய
வீமசேனனின் நுண்மையான கருத்துகளையுடைய சமையல்
நூல் கூறும் முறைகளிலிருந்து மாறாமால் சமைத்த பல்வேறு உணவு வகைகளை, ஒளியையுடைய வானத்தில்
கோள்கள் சூழ்ந்த, இளங்கதிர்களையுடைய கதிரவனை எள்ளி நகையாடும் தோற்றமுடைய, விளங்குகின்ற
பொன்னால் செய்த கலத்தில் இட்டு, நீ விரும்புவனவற்றை அன்புடன் கொடுத்து, உன்மீது உள்ள
மிகுந்த விருப்பத்தால், தானே நின்று உண்ணச் செய்வான்.
பரிசளிக்கும்
சிறப்பு
நல்லியக்கோடன்
வலிமையாகப் போரிட்டு வெற்றிபெற்றுப் பகைவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றியவன்;
வெற்றியுடைய வேலினையுடைய வேந்தர்களின் நிலைபெற்ற அரண்களை அழித்தவன்; தன்னை விரும்பிவந்தவர்,
பாணர் முதலியோரின் வறுமையைப் போக்கிய பின்னர், தன் படைவீரர்கள் பகையரசர்களிடமிருந்து
கொண்டுவந்த நல்ல பொருட்களை அவர்களுக்குக் கொடுத்தவன். குளிர்க்காலத்து வானத்தில் முழு
உருவம் பெற்றுப் பால் போன்ற ஒளியைப் பரப்பி, வெண்ணிறமான நிறைமதி ஊர்ந்து செல்வதைப்
போல், கூரிய சிற்றுளிகளால் செதுக்கிச் செய்யப்பட்ட, வலிமையான சக்கரத்தின் குடத்தில்
பொருத்திய ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்டு தேர்ச்சக்கரங்களோடு
கூடிய தேரின் மேற்பலகை உருக்கப்பட்ட சிவந்த அரக்கை வைத்துச் செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு வலிய தொழில் செய்யும் தச்சரின் கைத்தொழில் முற்றுப்பெற்ற பிறகு, தேரில் ஏறிச்சென்று,
’நன்றாக ஓடுகிறதா’ என்று வெள்ளோட்டம் பார்த்து, பெயர்பெற்ற அழகிய நடையுடைய தேரை, அதைச்
செலுத்தும் பாகரோடு நல்லியக்கோடன் தருவான். குதிரையைவிட விரைவாகச் செல்லும் வலிமையுள்ள
கால்களையும் ஒளியுள்ள முகத்தினையும் உடைய வெள்ளை எருதையும் (அதனைச் செலுத்தும்) பாகனோடு
கொடுத்து, அன்றே அவன் உங்களை வழி அனுப்பிவைப்பான். ஆதலால், நீ குறிஞ்சி நிலத் தலைவனும், பெரும்புகழுடையவனுமாகிய
நல்லியக்கோடனிடத்துச் செல்வாயாக.
Comments
Post a Comment